
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இடம் பெயர் தொழிலாளர் ஒருவர், தனது ஒரு வயது குழந்தையின் இறப்பு செய்தி அறிந்து, சாலையிலேயே கதறி அழுத புகைப்படம் சமூகத் தளங்களில் வைரலாகி காண்போரைக் கண்கலங்க வைத்து வருகிறது.
பிகாரைச் சேர்ந்த ராம்புகார் பண்டிட் என்ற தொழிலாளர், ஊரடங்கு உத்தரவால் தில்லியில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில், தனது ஒரு வயது மகன் இறந்து விட்டதாக தனது மனைவி கூறியதைக் கேட்ட ராம் பண்டிட் உடனடியாக பிகாரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அப்போது குழந்தையின் முகத்தை கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என எண்ணி சாலையிலேயே அமர்ந்து அவர் கதறிய புகைப்படம் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.
பிடிஐ புகைப்படக் கலைஞர் அதுல் யாதவ் எடுத்ததாகக் குறிப்பிட்டு, இந்தப் படம் சமூகத் தளங்களில் வைரலானது. ஊரடங்கு ஏற்படுத்திய துயரத்தின் சுவடாக இந்தப் படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் இறுதியாக ராம் பண்டிட் பிகார் சென்று சேர்ந்தார்.