ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் பேரன்கள் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் பாட்டி கோவிந்தம்மா சிக்கன் வாங்கி வந்து சமைத்துள்ளார். ஆனால் சமைக்கும் போது தவறுதலாக சிக்கன் மசாலா என நினைத்து பூச்சி மருந்தை குழம்பில் போட்டு சமைத்து தனது பேரன்களுக்கு பரிமாறி அவரும் சாப்பிட்டுள்ளார் அந்த மூதாட்டி.
அதை உண்ட சில நிமிடங்களிலேயே மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது , மூவரும் மயங்கிக் கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி கோவிந்தம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.