உத்தரப்பிரேச மாநிலம், கான்பூரில் தன்னை வளர்த்த எஜமானி இறந்ததால் துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த நாய் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அரசு மருத்துவமனையின் சுகாதார இயக்குநராக இருந்தவர் டாக்டர் அனிதா ராஜ் சிங். இவர் கான்பூரில் உள்ள மாலிக்புரத்தில் வசித்து வந்தவர். இவர் நாய்கள் மீது அதிக அன்பு கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நோயால் அவதியுற்ற நாயை தனது வீட்டிற்கு எடுத்து வந்து அதற்கு ஜெயா என பெயர் சூட்டி அன்போடு வளர்த்து வந்துள்ளார்.
இதனிடையே மருத்துவர் அனிதா சிறுநீரக நோயால் அவதியுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது பிரிவால் மிகவும் வருத்தத்தில் இருந்த ஜெயா அனிதாவின் உடல் அவரது வீட்டிற்கு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வந்த நேரம் பார்த்து துக்கம் தாங்காமல் வீட்டின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் இல்லாமல் ஜெயா இறந்து போனது . அனிதாவை பறிகொடுத்த குடும்பத்தினர் ஆசையாய் வளர்த்த நாயும் தற்கொலை செய்து கொண்டதை எண்ணி சோகத்தில் மூழ்கினர். நாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.