
புது தில்லி:
“தனி நபரின் அந்தரங்க உரிமை என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையா?” என்பது தொடர்பான தீர்ப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு. இந்தத் தீர்ப்பில், தனிநபர் ரகசியக் காப்பு என்பது அடிப்படை உரிமையே என்று கூறியது.
ஆதார் அடையாள அட்டைக்காக கைரேகை, கருவிழியை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அதில், ‘அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா?’ என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து விசாரித்து, முடிவு செய்ய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் என 9 நீதிபதிகள் இடம் பெற்று இருந்தனர்.
இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலும் அளித்தனர். அப்போது, கரக் சிங் மற்றும் எம்.பி. சர்மா வழக்குகளில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆராயப்பட்டது.
விசாரணை முடிந்து கடந்த 2ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு வியாழக்கிழமை இன்று வழங்கப்பட்டது. அதன்படி தனி மனித ரகசிய காப்பு உரிமை அடிப்படை உரிமை என உறுதி செய்யது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் ஆதார் பயன்பாட்டு கொள்கையில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, மத்தியில் இதற்கு முன்பு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, குடிமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்காக “பயோமெட்ரிக்” முறையில் விவரங்களை சேகரிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவரங்களை தெரிவிப்பதால் தங்களின் அந்தரங்க தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்து கர்நாடகா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி உள்பட ஏராளமான மனுதாரர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பின்னர் 2015-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தை கடந்த ஜூலை 18-ஆம் தேதி தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “1954-ஆம் ஆண்டில் எம்.பி. சர்மா, 1962-ஆம் ஆண்டில் கரக் சிங் ஆகிய மனுதாரர்களின் வழக்கில் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையாகாது என்று ஏற்கெனவே எட்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மாற்றினார்.
அதன் பின்னர் கடந்த ஜூலை 19-ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு மனுதாரர்கள், மத்திய அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. இந்த வாதங்கள் கடந்த 2-ஆம் தேதி முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் முன்வைத்த வாதத்தின்போது, “அந்தரங்கம் என்பதை அடிப்படை உரிமையாகக் கருதினாலும் அதில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். மேலும், “ஒரு தனி நபரின் ஒவ்வொரு அந்தரங்க செயலையும் அடிப்படை உரிமையாகக் கருத முடியாது என்றும் சுதந்திரத்தின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கும் வெவ்வேறு தன்மை உள்ளது” என்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.
ஆதார் எண் வழங்குவதற்காக விவரங்களை சேகரிக்கும் முறையை மத்தியில் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அரசு அறிமுகப்படுத்தியபோது அதை தற்போதைய பிரதமரும் 2014-ஆம் ஆண்டில் குஜராத் முதல்வருமாக இருந்த நரேந்திர மோதி கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



