சென்னையில், ‘பஸ் டே’ கொண்டாடும் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவது வாடிக்கை.
‘ஒங்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையப்பா…” னு சொல்கிற மாதிரி, பஸ் தினத்தில் மோதல் ஏற்பட்டால், தாங்கள் அலங்கரித்த பேருந்தை சேதப்படுத்தவும் செய்வார்கள்.
பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பொதுமக்களும்கூட பலவிதத்தில் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் சென்னை, பஸ்டே தினத்தில் இன்னும் நெரிசலுக்குள்ளாகும்.
சென்னையைப் பொறுத்த வரை, ‘பஸ் டே’ கொண்டாட்டம் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
ஆனால் கேரள மாணவர்கள், பேருந்து தினக் கொண்டா ட்டத்துக்குப் பதிலாக, பேருந்துகளைச் சுத்தப்படுத்தி, அந்த மாநில மக்களிடையே சபாஷ் பெற்றுள்ளனர்.
எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவர்கள், என்.எஸ்.எஸ் தினத்தை முன்னிட்டு, கேரள அரசுப் பேருந்துகளைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எர்ணாகுளம் டெப்போவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளைத் தண்ணீர் ஊற்றி சுத்தமாகக் கழுவினர்.
முகப்புக் கண்ணாடிகள் இருக்கைகளையும் சுத்தப்ப டுத்தினர்.
இந்தச் சேவையில், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். அன்றைய தினம் முழுவதையும் டெப்போவில் கழித்த மாணவர்கள், டெப்போவின் செயல்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு, டெப்போ பணியாளர்களும் உதவியாக இருந்தனர். மாணவர்களின் சேவையைப் பொதுமக்களும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
செய்தி… கே.சி.சாமி


