இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில், வசதி படைத்தவர்கள் தாமாக முன் வந்து மானியத்தை விட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் இன்று சர்வதேச எரிசக்தி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது … நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்திய போது, வசதி படைத்தவர்கள் மானியம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். அதை ஏற்று நாடெங்கும் 2.80 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியம் பெறுவதை தவிர்த்தனர். இதனால் மத்திய அரசுக்கு 100 கோடி ரூபாய் மிச்சம். இந்தப் பணம் ஏழைகள் நலனுக்காக செலவிடப்படும். எனவே வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியம் பெறுவதில் இருந்து விலக்கு பெற வேண்டும்… என்றார். மேலும்… நமது நாடு முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமானால், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக்கூடாது. தற்போது நாம் எரிசக்தியை 77 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதை நாம் 10 சதவீதம் குறைத்தாக வேண்டும். இந்தியாவின் 75–வது சுதந்திர தினம் 2022–ம் ஆண்டு கொண்டாடப்படும் போது 10 சதவீதம் எரிசக்தி இறக்குமதியை குறைக்க வேண்டும். இது நமது கனவாக இருக்க வேண்டும்.இதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் 2030–ம் ஆண்டுக்குள் நம்மால் 50 சதவீத எரிசக்தி இறக்குமதியை குறைக்க முடியும் என்று உறுதிபட தெரிவிக்கிறேன். எரிசக்தி உற்பத்தியை உள்நாட்டில் நாம் அதிகரிக்கும் போது, ஏழைகளுக்கு மேலும் உதவ முடியும். தற்போது நாடெங்கும் 27 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் 1 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்துக்காக நாடெங்கும் 12 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களது வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மானியத்தொகை வழங்கப்படுகிறது. மானியத்தொகை சிந்தாமல், சிதறாமல் சென்றடைவதால் ஊழல் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊழலை எதிர்த்து போராடி ஒழிக்க வேண்டுமானால் அமைப்பு நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் கொள்கை முறை வேண்டும். எரிவாயுக்கான நேரடி மானியம் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. – என்றார்.
வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுத்தர வேண்டும்: மோடி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

