மும்பை: பொது விநியோகக் கொள்கையில், மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தலைமையில் மும்பையில் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதைக் கண்டித்து நியாய விலைக்கடை வியாபாரிகள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் மோடியின் இளைய சகோதரரும், நியாய விலைக்கடை வியாபாரிகள் மற்றும் டீலர்கள் சங்கத்தின் துணை தலைவருமான பிரகலாத் மோடி என்பதுதான் ஆச்சரியம். ஆனால், இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரகலாத் மோடி, “இது எனது சகோதரர் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டம் அல்ல. மாறாக மத்திய அரசின் பொது வினியோக திட்ட கொள்கைக்கு எதிரானது. மத்திய அரசின் முடிவு ஏழைகளுக்கு எதிராக அமைந்துவிட்டது. நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இன்றைக்கும் மண்ணெண்ணெய் மற்றும் அத்தியாவசிய தானியங்கள் வழங்கப் படுவது அத்தியாவசியத் தேவையாக இருக்கும் நிலையில், இதற்கான மானியங்களை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது தவறானது. இது ஏழைகளுக்கு எதிரானதாகும். எனவே அரசின் இந்தக் கொள்கையை எதிர்த்தே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.

