உ.பி., மாநிலம், கோதுவா கிராமத்தில் மக்கள் தங்கள் வீடுகளை வலுக்கட்டாயமாக விற்று விட்டு வெளியூர்களுக்குச் செல்கின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் கூறுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் தங்களுக்கு அளிக்கப் படும் சலுகைகளால் மிதப்பு ஏறி இருக்கும் சிறுபான்மையினர் அரசியல் கட்சிகளை மிரட்டி கைக்குள் போட்டுக் கொண்டு செய்து வரும் அடாவடிகள் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இந்த கிராம மக்களை வாட்டி வதைக்கிறது, நாட்டின் பழைமையான சட்டம் ஒன்று. அது, எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டம் முறைகேடாகக் கையாளப் படுவதுதான்!
இதுபற்றி இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் ஏதாவது பிரச்னைகளில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் பொய்யான புகார்கள் கொடுக்கப் பட்டு, அதன்கீழ் வழக்குகளைப் பதிவு செய்து, எங்களை வாழ விடாமல் செய்கிறார்கள். நாங்கள் இதனால் பெரிதும் சோர்ந்து ஏமாற்றமும் வேதனையும் அடைகிறோம். எனவே நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டுச் சென்றுவிட எண்ணுகிறோம் என்று உள்ளம் குமுறிக் கூறுகின்றனர்.
இது குறித்த தகவல்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பலத்த விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. வரதட்சிணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தைப் போல், எஸ்சி எஸ்டி வன்கொடுமைச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். எந்த அரசுக்கும் இதில் கைவைக்க தைரியமில்லை, வாக்கு வங்கி அரசியலால் பொதுவானவர்கள் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்காகப் பரிந்து பேச இங்கு எவருமே இல்லை என்று தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
பாஜக., ஆளும் உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படுவது யோகி ஆதித்யநாத்துக்கு அவப்பெயர்தான் என்று கூறும் சிலர், அவர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். அதே நேரம், இப்போதும் ஜாதியின் பெயரால் பெண்களுக்கு வன்கொடுமைகள் இழைக்கப் படுகின்றன; இவை உத்தரப் பிரதேசத்தில் இன்னமும் ஜாதீயக் கட்டுமானத்தின் பெயரால் நடக்கின்றன; எனவே இது போன்ற சட்டங்கள் இன்னும் தேவைதான் என்றும் பதில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர் சிலர்.