
கோவாவில் இருந்து நிஜாமூதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றில் 8 வயது சிறுமி ஒருவர் முன்னாள் ராணுவ வீரரான அவரது தந்தை, தாய், தங்கை, அண்ணன் ஆகியோருடன் தில்லிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற அதே ரெயிலில் 33 வயதான ராணுவ வீரர் பிரபு மல்லப்பா என்பவர் பயணம் செய்துள்ளார். அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சத்தாரா மாவட்டம் லோனாட்-சல்பா ரெயில் நிலையம் அருகே சென்ற போது, சிறுமி தனது முன்பதிவு இருக்கையில் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்,
அப்போது அந்த இருக்கை அருகே இருந்த பிரபு மல்லப்பா, அந்த சிறுமியை மெதுவாக தூக்கிக்கொண்டு கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார், ஆனால் சிறுமி அதிர்ச்சியில் கண்விழித்து சத்தம் போட்டுள்ளாள்.
இதனால் செய்வது அறியாமல் திகைத்த பிரபு மல்லப்பா அந்த சிறுமியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே வீசி உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமி படுகாயத்துடன் தண்டவாளம் அருகே நடுகாட்டில் விழுந்து கிடந்துள்ளார்.

மறுநாள் காலை சிறுமி படுகாயத்துடன் கிடந்ததை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
தூக்கி வீசப்பட்டபோது ரெயில் மெதுவாக சென்றதால் அவள் உயிர் பிழைக்க நேர்ந்துள்ளது. இதன்பின் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் ராணுவ வீரர் என்பது மட்டும் தெரியவந்தது.
இதனால் போலீசார் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளின் விவரங்களை சேகரித்ததில் சந்தேகம்படும்படியாக 4 பேர் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இறுதியில் ராணுவ வீரர் பிரபு மல்லப்பாவை போலீசார் கண்டுபிடித்த நிலையில், இவர் பணியின் காரணமாக உத்தரபிரதேசம் ஜான்சிக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் ஜான்சி சென்று அவரை பிடித்து கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.