ஆஸி.யில் இந்தியப் பெண் கொலை: மோடி தலையிட இ.கம்யூ. கோரிக்கை

Published:

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு கவனம் செலுத்தி, ஆஸ்திரேலிய பிரதமருடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இப்போது நடந்துள்ள சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, அங்கிருக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று, ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் இந்தியப் பெண் பொறியாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. . சிட்னியின் புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மீட்டில் உள்ள பாராமட்டா பூங்காவில் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிரபா அருண் குமார் (வயது 41) கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்டு அந்த வழியே சென்ற ஒருவர், அவசர உதவி மையத்துக்கு அளித்த தகவலையடுத்து, வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப் பட்டார். காயம் மிகவும் கொடூரமாக இருந்ததாலும், அவரது உடலில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வெளியேறி விட்டதாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் கத்தியால் குத்தியவர் யார் என்பது தெரியவில்லை.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img