ஸ்ரீரங்கப்பட்டினம்: தாங்கள் ஆற்றில் குளித்தபோது, அதைப் படம் எடுத்த இளைஞருக்கு, மாணவிகள் தர்ம அடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருச் சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு சுற்றுலாவாக வந்தனர். அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை இளைஞர் ஒருவர் மரத்தில் மறைந்திருந்து தனது செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார். ஆற்றில் மாணவி ஒருவர் குளித்துவிட்டு வந்து, மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றி இருக்கிறார். அதையும் அவர் செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது, அதை கவனித்து விட்ட மாணவி. உடனே கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சலைக் கேட்ட கிராம மக்களும் மற்ற மாணவிகளும் ஓடி வந்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் உதவியுடன் ஆபாச படம் எடுத்த அந்த இளைஞரைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கி, செருப்படி கொடுத்து உதைத்துள்ளனர். அதன்பின், அந்த இளைஞர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது அளிக்கப் பட்ட புகாரைப் பெற்று கொண்ட போலீசார், மேலாபுறா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

