ஹைதராபாத்:
நடிகை தமன்னா மீது ஹைதராபாத்தில் காலணி வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
ஹைதராபாதில் நகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவுக்கு ஞாயிற்றுக் கிழமை வந்தார் நடிகை தமன்னா. திறப்பு விழா முடிந்த பின்னர், அந்தக் கடையில் இருந்து வெளியே தமன்னா வந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது இளைஞர் ஒருவர் காலணியை வீசி எறிந்தார்.
ஆனால், அந்தக் காலணி தமன்னா மீது படாமல், அவருக்கு அருகே இருந்த நகைக்கடை ஊழியர் ஒருவர் மீது பட்டு கீழே விழுந்தது. திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, காலணி வீசியவரை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் கைது செய்தனர்.
காலணியை வீசியவர் முஷீர்பாதைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரியான கரீமுல்லா என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஏன் தமன்னா மீது காலணி வீச வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த நபர், தமன்னா, அண்மைக்காலமாக நடித்து வெளிவந்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் தனக்கு அதிருப்தியைத் தந்ததாகவும், அதனால் காலணியை வீசியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், நகைக்கடை ஊழியர் கொடுத்த புகாரில், கரீமுல்லா மீது நாராயண்குடா காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.