
ஐ.பி.எல் 2023 – ஆறாம் நாள் – 05.04.2023
முனைவர்
கு. வை. பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2023 தொடரின் ஆறாம் நாளான நேற்று பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே கௌஹாத்தியில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றது. பஞ்சாப் அணி (197/4, ப்ரப்சிம்ரன் சிங் 60, ஷிகர் தவான் 86, ஜேசன் ஹோல்டர் 2/29) ராஜஸ்தான் அணியை (192/7, சஞ்சு சாம்சன் 42, ஹெட்மேயர் 36, துருவ் ஜுரல் 32, நாதன் எல்லிஸ் 4/30) 5 ரன் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்கள் சரவெடியாகச் செயல்பட்டனர். ப்ரப்சிம்ரன் சிங் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (34 பந்துகள்) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் நிதானத்தை காட்டிய கேப்டன் ஷிகர் தவான் அடித்த ஒரு பந்து அடுத்து வந்த பனுக்கா ராஜபக்சா மீது பட்டதால், அவர் 1 ரன்னில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார். இருப்பினும் அடுத்ததாக வந்த ஜித்தேஷ் சர்மா 2 பவுண்டரி 1 சிக்ருடன் 27 (16 பந்துகள்) ரன்கள் குவித்து ஆட்டமிழந்து செல்ல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா அடுத்ததாக களமிறங்கி 1 (2 பந்துகள்) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இறுதியில் ஷாருக்கான் 11 (10 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் பொறுமையாக விளையாடிய ஷிகர் தவான் கடைசி நேரத்தில் சற்று அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (56 பந்துகள்) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் 197/4 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து 198 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு யாருமே எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் அஷ்வின் தொடக்க வீரராக களமிறங்கியது ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக கடைசியாக 2013இல் சென்னை அணிக்காக மைக் ஹசியுடன் தொடக்க வீரராக ஒரு போட்டியில் களமிறங்கியிருந்த அவர் 10 வருடங்கள் கழித்து இந்த போட்டியில் மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் மறுபுறம் அதிரடியை துவக்க முயற்சித்த ஜெய்ஸ்வாலை 11 (8 பந்துகள்) ரன்னில் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்த ஓவரில் அஸ்வினையும் டக் அவுட்டாக்கினார்.
அதனால் 26/2 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு அடுத்த களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (11 பந்துகள்) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சம்சானும் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (25 பந்துகள்) ரன்கள் குவித்து 11வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் மிடில் ஓவர்களில் தடுமாறிய ராஜஸ்தானை அதிரடியாக விளையாட முயற்சித்து காப்பாற்ற முயன்ற ரியான் பராக்கை 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 20 (12 பந்துகள்) ரன்களில் அவுட்டாக்கிய நாதன் எலிஸ், மறுபுறம் ஆடிய தேவதூத் படிக்கலையும் 21 (26 பந்துகள்) ரன்களில் காலி செய்தார். அதன் காரணமாக 124/6 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு கடைசி 5 ஓவரில் வெற்றி பெற 74 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது சிம்ரோன் ஹெட்மையர் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் டெத் ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவித்து போராடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதனால் சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் ஜுரேல் சிங்கிள் எடுக்க 2வது பந்தில் டபுள் எடுத்த ஹெட்மேயர் 3வது பந்திலும் டபுள் எடுக்க முயற்சித்து 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (18 பந்துகள்) ரன்களில் ரன் அவுட்டானது பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இறுதியில் துருவ் ஜுரேல் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32* (15 பந்துகள்) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 192/7 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தொடர்ந்து 2வது வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்தது. அதிகபட்சமாக அந்த அணியின் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
தமிழக வீரர் அஷ்வினை தொடக்க வீரராக அனுப்பியது தோல்விக்குக் காரணமா? அல்லது ஜெய்ஸ்வால், பட்லர் சரியாக விளையாடத்து தோல்விக்குக் காரணமா? ராஜஸ்தான் அணி நிர்வாகம் அராய வேண்டிய விஷயம்.





