ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப் படுகின்றன: உச்ச நீதிமன்றத்தில் மன்றாடும் அமலாக்கத் துறை!

Published:

stalin met senthil balaji - 2026
#image_title

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்றாடியும்கூட, மேலும் வழக்கு இழுத்தடிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி, அடுத்த விசாரணையை 20 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். நீதிமன்ற உத்தரவுபடி அவரது காவல் நீட்டிக்கப்பட்ட போதிலும் நெஞ்சு வலி இருப்பதாக அவர் கூறியதால் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் வகையில் தங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அப்போது அமலாக்கத்துறை வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த போது, செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அரசியலில் செல்வாக்கு மிக்க செந்தில் பாலாஜியிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், முழுமையாக விசாரணை நடத்த இயலாது. விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கு நீர்த்துப் போக வாய்ப்பு உள்ளது. எனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் அவரிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை. இதனால் எங்களால் உரிய கடமையை செய்ய முடியவில்லை. செந்தில் பாலாஜி வழக்கீல் உச்ச நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும்… என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இரு நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதன் பின் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சென்னை உயர் நீதிமன்றம் மூன்றாவது நீதிபதியை ஒரு வாரத்துக்குள் நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை மெரிட் அடிப்படையில் உயர் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். வழக்கை விரைவாக விசாரிக்க ஏதுவாக பட்டியலிட வேண்டும். செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை மனுதாக்கல் செய்யலாம். நீதிமன்றம் ஜாமீன் வழங்காத நிலையில் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில்தான் இருப்பார்… என்று கூறியது.

மேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கை வரும் ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

Related articles

Recent articles

spot_img