புது தில்லி: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்படும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 6 அவசரச் சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவானது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் (பி.ஐ.ஓ.), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் (ஓ.சி.ஐ.) இடையே உள்ள வேறுபாட்டை நீக்குகிறது. உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்துத் தெரிவிக்கையில், இரட்டை குடியுரிமை வழங்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை; எனினும் குடியுரிமை அந்தஸ்து போல ஒரு சலுகையை இரு அட்டைத்தாரர்களும் இதனால் பெறுகின்றனர். இந்தச் சட்டத் திருத்த மசோதா பாகிஸ்தான், வங்கதேச அகதிகளுக்குப் பொருந்தாது என்றார். மக்களவையில் இதுதொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்… இச்சட்டத் திருத்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். அதில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஜனவரி 9ஆம் தேதிக்குள் ஒன்றாக இணைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இச்சட்டத் திருத்தம் தொடர்பாக ஓர் அவசரச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மக்களைவக் கூட்டத் தொடரின்போது இந்தத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்டது – என்றார்.
வெளிநாட்டு இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. ஒன்றாக இணைந்த அட்டை: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
Popular Categories


