சபரிமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது கேரள போலீஸ்.
சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் போலீஸ் இல்லாததால், சரிவர சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சன்னிதானம் வரை செல்ல முடியாமல் திரும்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகம் உள்ளது. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் வந்தாலும், தாங்கள் பதிவு செய்த நேரத்தில் இருந்து குறைந்தபட்சம், 24 மணி நேரம் கடந்த பின் தான் அவர்கள் பம்பை செல்ல முடிகிறது. அதன் பின் அங்கிருந்து மலையேறி 8 மணி நேரம் வரை வரிசையில் நிற்கின்றனர். இது பக்தர்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.
எந்த வசதிகளும் இல்லாமல் பக்தர்கள் பெருமளவு நேரத்தை போக்குவரத்து சிக்கலிலேயே சந்திக்க நேரிடுகிறது. நிலக்கல் அருகே இலவுங்கல் முதல் ளாகா வரை 12 கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுகின்றன. இதனால் பக்தர்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கேரள அரசு பஸ்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் நிலக்கல் – -பம்பை சேவை, பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, சபரிமலைக்குச் செல்லும் பாதைகளில் முன்னதாகவே வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். தண்ணீரும், உணவும் கிடைக்காத இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுவதால், பக்தர்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு பல மணி நேர காத்திருப்புக்கு பின் இவர்கள் நிலக்கல்லில் இறங்கி கேரள அரசு பஸ்களில் ஏறினால், பல மணி நேரம் கழித்துதான் அந்த பஸ்களும் பம்பைக்கு இயக்கப்படுகின்றன.
பம்பையில் கூட்டம் குறைவதைப் பொறுத்து, அங்கிருந்து நிலக்கல்லுக்கு பஸ்கள் அனுப்பப்படுவதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் நிலக்கல்லிலும் பக்தர்கள் பல மணி நேர காத்திருப்புக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இதனாலும் கடும் சோர்வு அடைகின்றனர்.
இந்த கூட்ட நெரிசலால் விபத்துகளும் ஏற்படுகின்றன. துலாப்பள்ளியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த கேரள அரசு பஸ்சை டிரைவர் இயக்கிய போது, பஸ்ஸின் கீழே படுத்திருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாய் மகேஷ் ரெட்டி (32), சூர்யா பாபு(22) ஆகியோரின் கால்கள் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதை அடுத்து இருவரும் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலக்கல்லில் கேரள அரசு பஸ்சிலிருந்து ஒரு குழந்தை தவறி விழுந்ததை கண்டித்து, அங்கும் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். இவ்வாறு ஏற்கனவே உள்ள கூட்ட நெரிசல் போதாது என்று விபத்துகளால் ஏற்படும் சாலை மறியல்களால் மேலும் போக்குவரத்து பெரும் சிக்கலாகி இருக்கிறது.
இப்படி பல மணி நேரம் காத்திருந்து நிலக்கல்லில் இறங்கி பம்பை சென்று மலை ஏறிச் சென்றாலும் சரங்குத்தி, கியூ காம்ப்ளக்ஸ்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நாள் கணக்காக ஆகிவிடும் சூழலில் அதன் பின்னரே பக்தர்கள் ஐயப்பன் சன்னிதானத்துக்கு தரிசனத்திற்காக செல்ல முடிகிறது. இவ்வளவு சிரமப்பட்டு சாப்பாடு தண்ணீர் எதுவும் இல்லாமல் இயற்கை உபாதைகளை கூட சரியாக கழிப்பதற்கு வழி இன்றி, சன்னிதானம் சென்றாலும், முந்தைய காலங்களைப் போல் ஐயப்பனின் தரிசனம் கிடைப்பதில்லை என்று பக்தர்கள் மன வருத்தத்தில் கூறுகின்றனர்.
இதற்கிடையே, பக்தர்களுக்கு தேவையான வசதியை செய்து தரும்படி மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.