மும்பை:
துபையில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மும்பையில், மஹாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரான துபைக்குச் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு, சட்ட ரீதியான விசாரணைகள் முடிந்த பின்னர், நேற்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டது.
இதனை அடுத்து, ஸ்ரீதேவியின் உடல் எம்பால்மிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் நேற்றிரவு மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடலைப் பார்த்த மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர், ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளைச் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவரது உடல் செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அவரது உடல் விலே பார்லேயில் உள்ள மின் மயானத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனால், சாலையில் நெரிசல் ஏற்பட்டது. அங்கும் பிரபலங்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர். முன்னதாக, மஹாராஷ்டிரா மாநில அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மாநில அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் வாகனத்தில் செல்ல, அதிகளவிலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சோகத்துடன் பின்தொடர்ந்து வந்தனர்.
மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின் மயானத்தில் குடும்ப வழக்கப் படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. மாலை சுமார் 6 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே சமூக வலைத்தளங்களில், அவரது உடலுக்கு மூவர்ணக் கொடி போர்த்தப் பட்டதற்கு சர்ச்சைகள் எழுப்பினர். இருப்பினும், நாட்டுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தவர்கள், சேவை செய்தவர்கள், கலாசாரத் தூதுவர்கள் என சிலருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப் படும் போது, மூவர்ணக் கொடி போர்த்துவது வழக்கமான நடைமுறைதான் என சிலர் பதில் அளித்தனர். இருப்பினும் சர்ச்சை மட்டும் ஓயாமல் நீண்டு கொண்டே இருந்தது.