இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். வழக்கமாக செல்பவர், கடந்த சில வருடங்களாக செல்ல இயலாமல் போனதாக வருத்தப்பட்டு கூறியிருந்தார். இந்த முறை இமயமலைப் பயணத்தில், உத்தராகண்ட் மாநிலம், ரிஷிகேசத்தில் உள்ள தயானந்தா ஆசிரமத்தில், துறவிகளுக்கு உணவு பரிமாறினார். ரிஷிகேஷ் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபாடு செய்தார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது அரசியல்வாதியாக 100 சதவீதம் சிறப்பாக செயல்பட இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆன்மீக புத்தகங்கள் படிப்பதற்காகவும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை சந்திப்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை; இன்றைய இளைய தலைமுறையினர் கடவுள் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அது மிக முக்கியமானது என்று கூறினார் ரஜினி காந்த். மேலும், கடவுள் மீது முழு நம்பிக்கை வைப்பதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கற்றுத் தர வேண்டும் என்றார்.
தமிழகத்தில் தன்னால் சுதந்திரமாக வெளியே சென்று வர முடியாத நிலை உள்ளதாகக் கூறிய அவர், முன்பு நடிகர் பாத்திரத்தை கொடுத்திருந்த கடவுள், இப்போது, எனக்கு அரசியல் பாத்திரம் கொடுத்திருக்கிறார், அதில் 100 சதவிகிதம் சிறப்பாக செயல்படவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.