பெங்களூரு: லிங்காயத் சமுதாயத்தினரை தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என பரிந்துரை செய்வதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் லிங்காயத் மற்றும் வீரசைவப் பிரிவினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
கலபுர்கியில் கடும் மோதல் மூண்டது. லிங்காயத் பிரிவினர் தனி மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஒப்புதல் அளித்து கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை தீர்மானம் குறித்து தகவல் வெளியே வந்ததும், அதனை பெரிய அளவில் கொண்டாட லிங்காயத் சமூகத்தினர் தெருவில் வந்து கொண்டாட்டம் போட்டனர். அப்போது, வீரசைவர்கள் அமைச்சரவை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
அமைச்சரவையின் இந்த முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீரசைவ மரபின் உறுப்பினர்கள், நேருக்கு நேர் மோதினர். இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் எதிராக கருத்துகளை தெரிவித்து கைகலப்பில் இறங்கினர்.
முன்னதாக, நாகமோகன் தாஸ் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அங்கீகரித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் குறித்து தகவல் வெளியானதும், லிக்காயத் பிரிவினரிடையே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அதிகரித்தது.
அடுத்து வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி பிரிவினைவாத அரசியலில் இறங்கிவிட்டதையே இது காட்டுகிறது என்று பாஜக., கருத்து தெரிவித்துள்ளது. எனவே இது ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று கூறியது பாஜக. ஆனால் லிங்காயத் சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களது நெடுநாள் போராட்டத்தின் பலன் இது என்று கூறினர். லிங்காயத் பிரிவினர் அரசியல் ரீதியாக செல்வாக்குள்ளவர்களாகத் திகழ்வது காங்கிரஸின் இத்தகைய முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.