தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட்- 6 ஏ’ செயற்கைக்கோள் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, பல நவீன செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது. தற்போது, தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன ஜிசாட்- 6 ஏ செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை 4:56க்கு விண்ணில் செலுத்தப் படுகிறது. இதற்காக, ஜியோ சின்க்ரனைஸ்ட் ரக ஜிஎஸ்எல்வி., எப் -8 ராக்கெட் பயன்படுத்தப் படுகிறது. இந்த ராக்கெட் ஏவப்படுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் 1:57க்கு துவங்கியது.
ஜிசாட் -6ஏ செயற்கைக்கோள் 2,140 கிலோ எடை கொண்டது. இது 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் பூமிக்கு அருகில் 170 கி.மீ. உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இதில் அலைபேசி தகவல் தொடர்புக்கு பயன்படும் சக்தி வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது செலுத்தப்படவுள்ள ராக்கெட் ஜிஎஸ்எல்வி., ரகத்தில் 12வது ராக்கெட். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கபட்டுள்ள ஆறாவது கிரையோஜெனிக் எஞ்ஜின் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது.