
லக்னௌ: இஷ்டம் போல் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்துவதற்கு உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கிடுக்கிப் பிடி போட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கடி பள்ளிக் கட்டணங்களை உயர்த்துவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது அரசின் கல்வித் துறைக்கு பெரும் தலைவலியைத் தந்துள்ளது.
எனவே, இது போன்ற புகார்கள் வருவதைத் தடுக்கும் விதத்தில் புதிய சட்டத்தை அமல் படுத்த மாநில பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, தனியார் பள்ளிக் கட்டணம் ஒழுங்கு முறை சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம், உபி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் புதிய சட்டத்தின் படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தனியார் பள்ளிகளில் 7 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முடியும். இந்தச் சட்டம் ஆண்டுக்கு ரூ.20,000 முதல் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்படும். அதையும் மீறி வசூல் செய்தால் அந்த தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகும். இவ்வாறு புதிய சட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.


