
மும்பை: மான் வேட்டை வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை அடுத்து அவர் இன்று மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை அடுத்து உடனே ஜோத்பூர் சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார். பின், ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு, நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன்பு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி மாற்றத்தால் உடனே வழங்கப்படவில்லை.
தொடர்ந்து சனிக்கிழமை இன்று, ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமாரை, சல்மான் கானுக்கு முன்னதாக தண்டனை வழங்கிய தேவ் குமார் காத்ரி சந்தித்துப் பேசினார். பின் நீதிமன்றம் கூடியதும் சல்மான் கானின் சகோதரி அல்விரா மற்றும் பாதுகாவலர் ஷேரா மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். 15 வது வழக்காக இருந்த சல்மான் கானின் ஜாமின் மனு முதலாவதாக விசாரிக்கப்பட்டது.

சல்மான் கான் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சல்மான் கான் வழக்கறிஞர், சாட்சியம் நம்பத் தகுந்ததாக இல்லை என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
3 மணி அளவில் மீண்டும் நீதிமன்றம் வந்த நீதிபதி, சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சல்மான் கான் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றும், மே 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இரண்டு இரவுகளை சிறையில் கழித்த சல்மான் கான் இன்றே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



