கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை லிங்காயத் சமுதாயத்தினர் விடுத்துள்ளனர். இது அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிட மாநிலம் ஔரங்காபாத்தில் ஆணையர் அலுவலகம் முன் லிங்காயத் ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் இது குறித்துக் கூறியபோது, மகாராஷ்டிரா மாநிலத்தில் லிங்காயத் பிரிவை சுமார் 4 கோடி பேர் பின்பற்றி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமுதாயத்தினருக்கு தனி மத அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அது போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
தேசிய அளவில் லிங்காயத் சமுதாயத்தினரை மத சிறுபான்மை குழு என அங்கீகரிக்க வேண்டும். லிங்காயத் சமுதாயத்திற்கு சுதந்திரமான மத நிலைப்பாட்டை அரசு வழங்கும் வரை பேரணிகளை நடத்துவோம் என்று கூறினார்.