திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப்படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்

Published:

tirupathi archaka - 2026

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது முறைகேடு புகார்களைக் கூறிய தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதருக்கு தேவஸ்தானம் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

ஆந்திராவில், திருப்பதி, திருமலை தேவஸ்தான தலைமை அர்ச்சகராக உள்ள ரமண தீட்சிதர் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் தேவஸ்தானத்தின் மீது பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். லட்டு பிரசாத விற்பனை, ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மன்னர் காலத்து ஆபரணங்கள் மாயமானதாகக் கூறினார். இதுகுறித்து விளக்கம் கேட்டு தேவஸ்தான நிர்வாகம் அர்ச்சகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக, திருப்பதி கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாக திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.

திருப்பதி கோவிலில் பரம்பரை அர்ச்சகர்களாக 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் ரமண தீட்சிதலு. கடந்த சில வருடங்களாகவே திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்துக்கும் கோவில் அர்ச்சகர்களுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் ரமண தீட்சிதலு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

அந்த சந்திப்பில் “பரம்பரை அர்ச்சகர்களான எங்களிடம் இருந்தவரை கோவில் நிர்வாகம் சிறப்பாக இருந்தது. 1996 வரை சுவாமியின் நகைகள், சொத்துகள் எங்கள் கண்காணிப்பில் பத்திரமாக இருந்தன. ஆந்திர அரசின் கீழ் அதுமாறிய பின் இந்த 22 ஆண்டுகளில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

இதுவரை நகைகளின் கணக்கு மட்டுமே பெருமாளுக்கு படித்துக் காட்டப்படுகிறது. ஆனால் பல நாட்களாக கணக்கெடுக்கப்படவில்லை. புதிய நகைகள் மட்டுமே சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன. பழைய நகைகள் என்ன ஆனது? இது குறித்து உடனடியாக ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை சிபிஐ போன்ற உயர்மட்ட விசாரணைக் குழு நடத்த வேண்டும்.

ஆலயத்துக்கு வரும் வருமானத்தில் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் அரசால் பல திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. இதில் குடிமாலா கிராமத்தில் உள்ள புதிய கோவில்கள் கட்டுமானப் பணியும் அடங்கும். இதற்காக ரூ.10 கோடி நிதி உதவி அளிக்க உள்ளது. இதற்கான திட்டம் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.

வி ஐ பி தரிசனத்துக்காக கோவிலின் பல பூஜை நேரங்கள் மாற்றப்படுகின்றன. கோவில் நிர்வாகத்துக்கு கோவிலின் ஆகமம் குறித்து எந்த அக்கறையும் இல்லை. வருமானத்தை மட்டுமே நிர்வாகம் குறி வைக்கிறது. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை குறைந்து பல விரும்பத்தகாத செயல்கள் நிகழ்கின்றன என்று குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இவை போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே பக்தர்களால் பல காலமாகக் கூறப்பட்டு வருபவைதான்.. இந்து ஆலயங்களுக்கு வழங்கப் படும் நிதி வேறு பல வடிவங்களில் அரசுகளால் திருப்பி விடப்படுவது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் ஆலயங்கள் அரசின் பிடியில் உள்ளனவோ அங்கெல்லாம் இந்த துரோகங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அண்மையில் உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப் பட்ட போது, திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம் மட்டுமே பல முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. பழைய நோட்டுகளை மாற்றுவதில் கோயிலைக் காரணம் வைத்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கோரி அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது தேவஸ்த்தான நிர்வாகம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img