குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வரும் ரமேஷ்சந்திரா பெஃபர், நான் கல்கி அவதாரம் என்றும், வேலைக்கு வர தேவையில்லை என்றும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கெஜட்டட் அதிகாரியாக பணியாற்றி வரும் ரமேஷ்சந்திரா பெஃபர், , கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்கு பெஃபர் அளித்துள்ள பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கருதப்படும் கல்கி அவதாரம் நான்தான். வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன். என் தவத்தின் பயனாக சில ஆண்டுகளாக நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் அலுவலகத்தில் இருக்கும்போதுதான் நான் கல்கி அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போதிருந்து எனக்கு தெய்வ சக்திகள் கிடைத்து வந்தன. நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னால் ஆபீசில் அமர்ந்து தவம் செய்ய முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.



