கர்நாடகாவில், மக்கள் தீர்ப்புக்கு மாறாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்து கொண்டுவிட்ட மஜத., காங்கிரஸ் கட்சிகளில், பதவி ஆசையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலர் பாஜக., பக்கம் தாவத் தயாராக உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 25 புதிய அமைச்சர்கள் கடந்த புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இருப்பினும் அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மஜத., கட்சி சரிசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் பங்கு பெற்றிருருந்த பலருக்கு இந்த முறை குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக எம்.பி. பாட்டீல், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட பலர், கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து இது குறித்து முறையிட்டனர்.
ஆனால், ராகுல் காந்தியோ பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இதனால் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அவர்கள் அனைவரும் பாஜக., பக்கம் தாவுவதற்குத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாயின. இதனால் அச்சம் அடைந்த ராகுல் காந்தி, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 20 பேரையும் மீண்டும் அழைத்துப் பேச திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தமது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சு நடத்தியபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் எழுந்துள்ள இந்தப் பரபரப்பான சூழலில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக., தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த பலர், பா.ஜ.க.வில் சேரத் தயாராக இருக்கின்றனர். இருப்பினும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு வலுவான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும். 104 எம்.எல்.ஏக்கள் கொண்ட வலிமையான கட்சியாக பாஜக இருக்கிறது என்று கூறினார் எடியூரப்பா.
எடியூரப்பாவின் இந்த முடிவு காங்கிரஸ் மற்றும் மஜத., கட்சித் தலைமைகளுக்கு நம்பிக்கை அளித்திருப்பதால், கட்சி உடைய வாய்ப்பில்லை என்று தெம்பாக இருக்கின்றனர். இதனால், தங்களுக்கு பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.




