ஹிஸ்புல் தலைவர் சையது சலாஹுதின் மகன் என்.ஐ.ஏ., அதிகாரிகளால் கைது!

Published:

Hizbul Chiefs Son Arrested In Srinagar In Terror Funding Case - 2026

ஸ்ரீநகர்: பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஹிஸ்புல் தலைவரும் பயங்கரவாதியுமான சையது சலாஹுதினின் மகன் சையது ஷகீல் யூசஃபை தேசியப் புலனாய்வு அமைப்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா்.

ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துமனையில் ஆய்வக உதவியாளராக சையது ஷகீல் பணிபுரிந்தாா். ராம்பக்கில் வசித்து வந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்தனா்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிப் பரிமாற்றம் செய்வதற்காக, வெளிநாட்டில் உள்ள அவரது தந்தை சையது சலாஹுதினிடம் இருந்து சட்டவிரோதமாக நிதியைப் பெற்றது தொடா்பான வழக்கில் ஷகீல் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில், சலாஹுதினின் முதல் மகன் ஷாகித்தும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா். இவா், ஜம்மு-காஷ்மீா் வேளாண் துறையில் பணிபுரிந்து வந்தாா்.

பாகிஸ்தானிலிருந்து தில்லி வழியாக ஹவாலா முறையில் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்க நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதாக கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. பிரிவினைவாதி சையது அலி ஷா கிலானிக்கு நெருக்கமான ஜி.எம்.பட், முகமது சித்திக் கனாய், குலாம் ஜிலானி லிலூ, ஃபரூக் அகமது தக்கா உள்பட 6 பேருக்கு எதிராக என்ஐஏ இதுவரை 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இந்த 4 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பா் மாதமும், இந்த ஆண்டு மே மாதமும் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சையது அலி ஷா கிலானியின் உறவினா்கள் உள்பட 10 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

இதனிடையே, காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35-ஏ பிரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு மீது உச்ச நீதிமன்றத்தில் 31-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், 2 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரிவினை வாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img