புதுதில்லி : ஐநா., வின் சுற்றுச் சூழலுக்கான மிக உயரிய விருது – சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் – இன்று பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது. இந்த விருதை ஐநா., பொதுச் செயலர் மோடிக்கு வழங்கினார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்டதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியது, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை 2022 ஆம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதற்கான 6 சாதனைகளுக்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபடுபவர்களை ஐநா., சபை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்‘ என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2018) உலகின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்ட 6 பேரை ஐநா., சபை தேர்வு செய்துள்ளது.
கொள்கை அடிப்படையிலான தலைமை என்ற பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கான ஐ.நா.,வின் உயரிய விருதினை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். இந்த விழாவில் பேசிய மோடி, இது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் தருணம். இந்த விருதை ஒவ்வொரு இந்தியனுக்கும் அர்ப்பணிக்கிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியர்கள் உறுதி பூண்டுள்ளனர். 125 கோடி இந்தியர்களால்தான் இந்த விருது சாத்தியமாகி உள்ளது என்றார்.




