மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற வேன் அருகில் கேஸ் பலூன் திடீரென வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்ட மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.
நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். ஜபல்பூர் மாவட்டத்தில் சுமார் 8 கிமீ வரை நடைபெற்ற பேரணியில் திறந்த வாகனத்தில் ராகுல் பிரசாரம் செய்து வந்தார். அப்போது அவர் வந்த வாகனத்துக்கு அருகே ஆரத்தி காட்டிய நேரத்தில், அருகே கேஸ் பலூன் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் ராகுல் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் ராகுல் வாகனத்தில் நின்று அனைவருக்கும் கையசைத்தபடி வந்துகொண்டிருக்க, அவருக்கு அருகில் ஒருவர் ஆரத்தி விளக்குகளுடன் கூட்டத்தை தள்ளிவிட்டு ராகுல்காந்தியை நோக்கி முன்னேறி வருகிறார். அப்போது கூட்டத்தில் நின்றிருந்த மற்றொருவர் தன் கைகளில் பலூன்களை வைத்திருக்க, ஆரத்தி வெப்பம், கேஸ் பலூன்கள் மீது பட்டு வெடித்துச் சிதறின. ராகுல் அதை அடுத்து 15 அடி தொலைவில் தான் இருந்தார். இருப்பினும் அவருக்கு இந்த விபத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதை அடுத்து உடனடியாக ராகுல்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின் ராகுல் தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார்.