2019 தேர்தலுக்கு முன்னதாக அயோத்தி விவகாரத்தில் முடிவு வந்துவிடக் கூடாது என்பதால், தேர்தல் வரைக்கும் அயோத்தி வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காததால், கண்டன தீர்மானம் கொண்டு வருவோம் என நீதித்துறையை காங்கிரஸ் கட்சி மிரட்டி வருகிறது என்றார் பிரதமர் மோடி!
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசிய போது…
காங்கிரஸ் நீதித்துறையை அரசியலில் இழுக்கிறது. நீதித்துறைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. அக்கட்சித் தலைவர் ஒருவர் 2019 தேர்தல் வருவதால், அயோத்தி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார். அந்த கோரிக்கையை நீதிபதி ஏற்காத போது, கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என நீதித்துறையை மிரட்டுகின்றனர். எந்த பயமும் இல்லாமல், நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என நீதித்துறையை நான் கேட்டு கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்து விட்டனர். தைரியமிருந்தால், மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே செய்த பணிகளுக்கு அவர்கள் சவால் விடட்டும்.
எனது ஜாதியைச் சொல்லி திட்டிய காங்கிரஸ் தலைவரை அக்கட்சி முதலில் சஸ்பெண்ட் செய்தது. ஆனால், 2 மாதங்களுக்கு பின்னர் அவரை சிறப்பாக வரவேற்றது.
பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் எப்போதுமே வாக்கு வங்கியாக பயன்படுத்தியே வந்தது. அம்பேத்கரை அக்கட்சி நடத்திய விதம் நாட்டுக்கே தெரியும். அவருக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கவே இல்லை.
பாஜக., இந்த நாட்டை வலிமைப்படுத்த முயற்சி செய்யும் நேரத்தில், அதனை உடைப்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. நான் வெளிநாட்டிற்குச் செல்லும் போது, அங்கு எனது ஜாதியை யாரும் பார்ப்பது இல்லை. அவர்கள் நாட்டையும், மக்களையும்தான் பார்க்கின்றனர்.
காங்கிரஸ் குழப்பம் நிறைந்த கட்சியாக உள்ளது. தங்களது முதல்வர் வேட்பாளர் குறித்து குழப்பத்தில் உள்ளது. அவர்களது தலைவர்களும் குழப்பத்தில் உள்ளனர். வளர்ச்சி அடிப்படையில் நாங்கள் ஓட்டு கேட்கிறோம்.
இந்த தேர்தல் வசுந்த ராஜேவின் 5 ஆண்டுகளுக்கும் காங்கிரசின் 5 ஆண்டுகளுக்கும் இடையிலான போட்டி.
தற்போது பாஜக.,வுக்கு ஓட்டு போட போகிறார்களா அல்லது உங்களை 50 ஆண்டுகளாக காக்க வைத்த கட்சிக்கு ஓட்டுப்போட போகிறீர்களா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
40 ஆண்டுகளாக ஒன் ரேங்க் ஒன் பென்சன் திட்டம் கொண்டு வர வேண்டும் என ராணுவ வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் அந்த திட்டத்தை நிறைவேற்றினோம்… என்றார் மோடி.
இதனிடையே இந்த நிகழ்ச்சி குறித்து டிவிட்டர் பதிவில் செய்தியைப் பதிவு செய்த என்.டி.டி.வி., 2019 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி ஒரு தீர்வை எதிர்பார்க்கிறது என்று மோடி குற்றம்சாட்டியதாக பதிவு செய்திருந்தது. மேலும், இது ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட செய்தி என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
ஆனால், மோடி அவ்வாறு பேசவில்லை என்றும், அதற்கு எதிர்ப்பதமாகவே கருத்து சொன்னார் என்றும் நெட்டிசன்கள் என்.டி.டி.வியை துளைத்து எடுத்தனர். எண்டிடிவி பொய்ச் செய்தியை பரப்புவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதை அடுத்து வெநேரம் கழித்து, என்.டிடி.வி அந்தச் செய்தியின் தலைப்பை மாற்றியது. ஆனால், உப தலைப்பை மாற்றவில்லை அதையும் கருத்திட்டு, கேலி செய்தனர் நெட்டிசன்கள்.