சபரிமலையில் குறைந்து வரும் வருமானம் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கவலை

Published:

sabarimala - 2026

திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த முறை மிகப் பெரும் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. சபரிமலையில் குறைந்து வரும் வருமானம் அதற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டைச் சேர்ந்த கோயில்களில், 2017-18 ஆம் நிதி ஆண்டில் வருவாய் ரூ682 கோடியாக இருந்தது. அதில் ஓய்வூதியம் உள்பட செலவினங்கள் ரூ.677 கோடியாக இருந்தது.

தற்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு சபரிமலை வருமானம் குறைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த வருடம் நடை திறக்கப்பட்டது முதல் ஆறு நாள்களில் கடந்த வருட வருமானத்தை ஒப்பிடும்போது ரூ.14.34 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தேவசம் போர்டு கூறியுள்ளது

ஒவ்வொரு மாதமும் செலவினங்கள் போக ஓய்வுபெற்ற ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் கடந்த 4 மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதன்மூலம் சபரிமலை விவகாரம் தொடங்கிய காலத்திலிருந்து நிதிச் சிக்கல் அதிகரித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்குவதில் கூட சிக்கலை சந்தித்து உள்ளது. ஓய்வூதியத்துக்கான நிதி இருக்கின்ற சூழ்நிலையில் ஓய்வூதியதாரர்களை அது பெரிதும் பாதிக்காது; ஆனால் வருங்காலத்தில் மிகப் பெரும் சிக்கலை சந்திக்க நேரலாம்!

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டுப் பாட்டில்,  மொத்தம் 1253 கோவில்கள் உள்ளன. இந்த 1253 கோவில்களில் 60 முதல் 64 கோவில்களே வருவாய் ஈட்டித்தரும் கோயில்களாக இருக்கின்றன

கடந்த வருடம் சபரிமலையில் 330.43 கோடி ரூபாய் வருமானம் வந்ததாகவும் இதில் 75 கோடி ரூபாய் அளவுக்கு சபரிமலையில் வசதிகளுக்காக செலவு செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது! மீதமுள்ள நிதி வருவாய் இல்லாத கோயில் களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாம்.

மேலும் சபரிமலை சீசனின் போது பெரும்பாலான தொகை கேரள நீர் வாரியத்துக்கும் மின்சார வாரியத்துக்கும் செலவிடப்படுகிறது. நீர் வாரியத்துக்கு மட்டுமே கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ளது! மேலும்  அரசு ஊழியர்களின் தங்குமிடம் உணவு ஆகியவற்றுக்கு அதிக செலவு செய்யப்படுகிறது. இதனால் அரவணை பிரசாதம் தயாரிப்பது மிகவும் அதிக செலவினம் பிடிப்பதாக ஆகிவிட்டது

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

பணியாளர்களுக்கான ஊதியம் மட்டுமே 30 கோடியைத் தாண்டுகிறது. தற்காலிக பணியாளர்கள் உள்பட 5250 பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் சேர்த்து 65 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

4665 ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களில் கோயில் பணியாளர்கள் 3,200 பேர்! மற்ற பணியாளர்கள் 1465 பேர்! இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியத்துக்கு மட்டும் 105 கோடி ரூபாய் தேவைப்படுகிறது

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும்போது வருமானமும் அதில் குறைகிறது. இது மற்ற கோவில்களுக்கும் பொருந்தும். சபரிமலையை ஒட்டி மற்ற கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைவதால் வருமானத்தில் இழப்பு ஏற்படுகிறது

போக்குவரத்து மற்றும் மற்ற சேவைகளுக்கு முன் பதிவு செய்திருந்தவர்கள் அவற்றை கேன்சல் செய்யும்போது அவற்றாலும் இழப்பு அதிகரிக்கிறது இது அரசு போக்குவரத்து கழகத்துக்கான வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது

ஆனால் வருவாய் இழப்பு அதிகரிப்பது எந்த வகையிலும் ஓய்வூதியதாரர்களை உடனடியாக பாதிக்காது; ஓய்வூதியத்திற்கு என ஃபிக்ஸட் டெபாசிட் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு இருப்பதால் அது குறித்து கவலைப்பட தேவையில்லை! எதிர்கொள்ளும் சவால்கள் நிச்சயம் சரி செய்யப்படும். எனவே இதில் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று கேரள தேவசம் ரெக்ருமெண்ட் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் கூறியுள்ளார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img