கொல்கத்தா: சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தரக் குறைவாக பதிவு செய்து பதில் அளித்து விட்டார் என்பதற்காக, இளைஞர் ஒருவரை ஐஏஎஸ் அதிகாரியும், அவரது மனைவியும் போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைத்து வந்து, அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அலிபூர்துவார் மாவட்ட ஆட்சியர் நிகில் நிர்மலின் மனைவியை தரக் குறைவாக விமர்சித்ததன் பேரில் வினோத் குமார் சர்கார் என்ற இளைஞர் மீது ஃபலாகட்டா காவல் நிலையத்தில் ஆட்சியர் புகார் அளித்தார். இதை அடுத்து, வினோத் குமார் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர், காவல் நிலையத்துக்கு வந்த ஆட்சியரும் அவரது மனைவியும் போலீஸ் அதிகாரி சௌமியாஜித் ராயுடன் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த இளைஞர் தான் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் கெஞ்சிய போதும், நிர்மலால் கோபத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.
என் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டத்தில் என்னை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள்.. அரை மணி நேரத்தில் சிறையில் உன்னை உள்ளே தள்ள முடிந்த என்னால், உன் வீட்டுக்கே வந்து கொல்லவும் முடியும் என்று மிரட்டியுள்ளார். அப்போது, அவர் மனைவி நந்தினி இதை எல்லாம் எழுது என்று உன்னை யார் தூண்டிவிட்டது என்று கேட்டு அடித்துள்ளார். பின்னர் வினோத் குமாரின் ஃபோனைப் பிடுங்கி, பேஸ்புக்கில் பதிவு செய்ததை படித்துக் காட்ட்டுமாறு கூற, அவரோ அழுகை மேலிட தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார்.
போலீஸ் ஸ்டேஷனில் இவ்வளவு களேபரம் நடந்தும், இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்திருந்தனர் போலீஸார். இந்தக் காட்சி அங்கே வேறொருவரால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு, இணையத்தில் பதிவு செய்யப் பட்டது.
பேஸ்புக்கில் எழுதிய கருத்தால் ரவுண்டு கட்டப்பட்டு வலியும் வேதனையும் அடைந்த இளைஞர், தாம் அடிபட்ட அதே வீடியோ பகிரல் மூலம், ஆட்சியரை பழி வாங்கிவிட்டார். இந்த வீடியோக் காட்சிகள் வைரலாகி, ஆட்சியருக்கு விடுப்பு கொடுக்கப் பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் ஆட்சியர்!