பெங்களூர்: கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக் கலைப்பில் ஈடுபட மாட்டோம் என்றும், அதனால் காங்கிரஸ், மஜத கட்சியினர் கவலைப்பட தேவையில்லை என்றும் கர்நாடக மாநில பாஜக., தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, எங்கள் கட்சி எம்எல்ஏ.,க்கள் தில்லியில் இருந்து பெங்களூர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நாங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம். அப்போது வறட்சி நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வோம்.
எந்த நிலையிலும் நாங்கள் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அதனால் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலைப் பட வேண்டாம் என்று கூறினார்.
முன்னதாக, கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக., சதி செய்வதாகவும், இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ.,க்களுடன் பா.ஜ.,வினர் பேரம் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றன.
அதேபோல், தங்கள் கட்சி எம்எல்ஏ.,க்களுக்கு பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் கட்சியினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக பாஜக, குற்றம் சாட்டியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பேரம் பேசுவதைத் தடுக்க கர்நாடக பாஜக., எம்எல்ஏ.,க்கள் அரியானா மாநிலம் குருகிராமில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 4 பேர் பங்கேற்கவில்லை. மற்றவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப் பட்டனர்.