லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையைக் கொச்சைப் படுத்தும் விதமாகவும், கேலி செய்யும் விதமாகவும், சபரிமலைக்கு கம்யூனிஸ்டின் கைக்கூலியாக கள்ளப் பயணம் மேற்கொண்ட கனகதுர்காவை அவரது கணவர் துரத்தி அடித்தார். ஏற்கெனவே மாமியாரால் விரட்டப்பட்ட கனகதுர்கா, தற்போது கணவரால் துரத்தியடிக்கப் பட்டுள்ளார்.
சபரிமலைக்கு கம்யூனிஸ்ட் அரசின் கைக்கூலியாக, கள்ளத் தனமாக, நள்ளிரவில் பயணம் மேற்கொண்டு திரும்பிய கனகதுர்காவை, அவரது கணவர் வீட்டை விட்டு துரத்தியடித்தார். வீட்டில் சேர்க்கவும் மறுத்துவிட்டார் என்று கூறப் படுகிறது.
கம்யூனிஸ்ட் கொள்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்த பிந்து(40), கனகதுர்கா(39) என்ற இரண்டு நடுத்தர வயது பெண்கள், ஜன.2 ஆம் தேதி அன்று எவருக்கும் தெரியாமல், பக்தர்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், கோயில் நடை மூடப் பட்டிருந்த அதிகாலை நேரத்தில், போலீஸாரின் துணையுடன் திருட்டுத் தனமாக சபரிமலை சந்நிதி முன் நிறுத்தப் பட்டனர். ஓரிரு நொடிகளில் அங்கிருந்து திரும்பினர்.
அரசின் போலீஸ் துணையுடன் இப்படி நடந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர்கள் இருவரும் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீட்டிற்குத் திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதாகக் கூறப் படுகிறது. இதை அடுத்து காயத்துடன் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கனகதுர்கா.
இதனிடையே, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுக்கக் கோரி இருவரும் தாக்கல் செய்தனர். அதை எடுத்துக் கொண்ட நீதிமன்றம், இருவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும் படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் பெரிந்தாலமன்ன தாலுகா, அங்காடிபுரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றார். ஆனால் அவரது கணவர் கிருஷ்ணன் உன்னி மாமியார் மற்றும் குழந்தைகள் கனகதுர்காவை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளும் கதவைப் பூட்டி சாவியுடன் வேறு இடத்திற்குச் சென்று விட்டனர். இதை அடுத்து போலீசார் கிருஷ்ணன் உன்னியை காவல் நிலையத்துக்கே வரவழைத்துப் பேசினர். அப்போது கனகதுர்காவை உடன் அழைத்து செல்ல அவர் மறுத்து விட்டார்.
இதை அடுத்து போலீசார் கனகதுர்காவை பெரிந்தாலமன்னவில் இருக்கும் மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அங்கே அவருக்கு காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
குடும்பம் நன்றாக இருக்கவேண்டும், குழந்தைகள் நன்றாக வளர வேண்டும், குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொண்டு பயபக்தியுடன் சபரிமலைக்குச் சென்று வரும் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்கள் நன்றாக வாழ்கின்றன. ஆனால், ஐயனின் கட்டளையை மீறி சபரிமலையை கேலிப் பொருளாக்கியதற்காக ஐயனின் திருவிளையாடல் இது என்கின்றனர் பக்தகள்.