இந்திய பாகிஸ்தால் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு வீசியதாக ANI, PTI நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இதனிடையே, காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டியடிக்கப் பட்டதாக இந்திய ராணுவம் கூறியது.
காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் எஃப் 16 ரக பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் அத்துமீறி புகுந்து குண்டு வீசியதாகவும், அதை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் விமானங்கள் பறக்க காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி, ஜம்மு-காஷ்மீர், அமிர்தசரஸ் பதான்கோட் விமான நிலையங்களில் போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் புஞ்ச் பகுதியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அதே போல் காஷ்மீரை ஒட்டிய ஹிமாசலப் பிரதேசத்திலும் அடுத்த இரு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் பகுதியில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை கூறப் பட்டு வருகிறது.
”காஷ்மீர் எல்லையை ஒட்டிய பகுதியில் தாக்குதல் நடத்தியது உண்மையே; பொதுமக்களை காக்கவும், தற்காப்பிற்காகவுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இதனால், இந்தியா அதிரடி தாக்குதல் தொடுக்கும் என்ற அச்சம் காரணமாக பெரும்பாலான நகரங்களின் விமான நிலைய சேவைகளை நிறுத்தி வைக்க பாக்.அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவை முற்றிலும் நிறுத்தப் பட்டன.
லாகூர், முல்தான், சியால்கோட், பைசலாபாத், இஸ்லமாபாத் விமான நிலைய சேவை நிறுத்தப் பட்டுள்ளன. பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்து செல்லக் கூடிய விமான சேவைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மேலும், பல விமானங்கள் தரையிறங்காமல், புறப்பட்ட நாடுகளுக்கே திரும்பிச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலு சில விமானங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் மாற்று வழி கேட்டு காத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிஅலியில், அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். எல்லையில் பதற்றம் நிலவுவதால் இந்த அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் உடனான ஆலோசனையில் ரா அமைப்பும் பங்கேற்றுள்ளது.
இதனிடையே இன்று காலை இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் f-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. சுடப்பட்ட விமானம் அந்நாட்டின் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. சுடப்பட்ட விமானத்தின் விமானி பாராசூட் மூலம் கீழே குதித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 2 இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் பெரிதாக செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பாகிஸ்தான் கூறுவது பொய் என்று இந்திய ராணுவம் பதில் அளித்துள்ளது. இந்திய ராணுவ விமானங்கள் எதுவும் பாகிஸ்தானால் தாக்கப் படவில்லை , வீரர்களையும் அவர்கள் கைது செய்யவில்லை, அனைத்து வீரர்களும் தாக்குதலை நடத்திவிட்டு பத்திரமாக திரும்பிவிட்டனர்.
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என்று இந்திய விமானப்படை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. காரணம், சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்ட பின்னர் இந்திய ராணுவமோ, விமானமோ, பாகிஸ்தான் எல்லையைக் கடந்து செல்லவில்லை என்றும், இந்தத் தாக்குதல் பயங்கரவாத முகாம்களை குறிவைத்துத்தான் நடத்தப் பட்டதே தவிர, பாகிஸ்தான் ராணுவத்தினரையோ, பொதுமக்களையோ அல்ல என்று தெளிவாக்கப் பட்டுள்ளது.