உத்தர பிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெற்று வரும் கும்பமேளா இன்று நிறைவு பெறுகிறது. மகா சிவராத்திரியான இன்றுடன் கும்பமேளா நிறைவடைவதை ஒட்டி, திரிவேணி சங்கமத்தில் 1 கோடி பேர் வரை இன்று புனித நீராடுகின்றனர்.
பாரதத்தின் புனித நதிகள் என்று கூறப் படும் கங்கை, யமுனை ஆகியவற்றுடன், புராண கால சரஸ்வதி நதியும் இணையும் மூன்று நதிகள் சங்கமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.
கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் தொடங்கியத் கும்பமேளா. இது, மகா சிவராத்திரியான இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக நிகழ்வு என்றும், உலகில் மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் ஆன்மிக நிகழ்வு என்றும் பெயர் பெற்ற இந்தக் கும்பமேளா கடந்த 55 நாட்களாக நடந்து வந்தது. இதில் 22 கோடி பேர் வரை புனித நீராடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுகிறது. முன்னர் 2013 ஆம் ஆண்டில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது சாதனை அளவாக சுமார் 12 கோடிப் பேர் புனித நீராடினர். இந்த ஆண்டு 22 கோடிப் பேர் புனித நீராடியுள்ளனர். அடுத்த கும்பமேளா 2025ல் நடைபெறும்.
மகா சிவராத்திரியான இன்றுடன் இந்தக் கும்பமேளா நிறைவடைய உள்ளது. இன்று சுமார் ஒரு கோடிப் பேர் வரை புனித நீராடுவர் என்று எதிர்பார்க்கப் படுவதால், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை, மாநில அரசு செய்துள்ளது! இன்றைய நிகழ்வுக்கு பக்தர்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கும்பமேளா நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத் தகவல் வந்ததை அடுத்து, துணை ராணுவப்
படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த முறை கும்பமேளாவில் தூய்மை பெரிதும் பேணப் பட்டுள்ளது. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியில் முழு கவனம் செலுத்தின. இதனால் நகரம் பளிச்செனத் திகழ்கிறது. தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களை அண்மையில் பிரதமர் மோடி பாராட்டி, பாத பூஜை செய்தார்.