புது தில்லி: நேபாளத்தில் இன்று பிற்பகல் 11.56 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்தது குறித்தும், கட்டடங்கள் இடிந்து சேதம் அதிகரித்திருப்பது குறித்தும் வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் இருந்து சென்ற சுற்றுலாப் பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து சென்ற சுமார் 125 சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக தாயகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த சுமார் 125 சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தில் உள்ளனராம். மேலும், நாசிக்கைச் சேர்ந்த 80 பேர் நேபாளத்தில் உள்ள கோயில்களுக்கு சென்றுள்ளதாகவும், மலையேற்றப் பயிற்சிக்கு சுமார் 20 பேர் வரை சென்றிருப்பதாகவும் மகாராஷ்டிர தகவல் மையம் தெரிவித்துள்ளது.

