புது தில்லி: வெறும் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, ராகுல் பகிரங்கம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். தாங்கள் சொல்லாததை சொன்னதாகக் கூறி பிரசாரம் செய்ததற்கு நீதிமன்றம் ராகுலை கண்டித்துள்ளது.
ரபேல் போர் விமானங்கள் குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்ட கூடுதல் ஆவணங்களையும் பரிசீலித்து, விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. ஆனால், இதனை திரித்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றமே காவலாளி மோடியை திருடன் என்று சொல்லி விட்டதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் பேசினார்.
இது பெரும் பிரச்னையாக வெடித்தது. தில்லி பாஜக., எம்.பி. மீனாட்சி லேகி, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதை அடுத்து, விளக்கம் கேட்டு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம். இதற்கு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், பிரசார வேகத்தில் அவ்வாறு தவறுதலாகக் கூறி விட்டதாகவும், அதற்கு வருந்துவதாகவும் கூறினார்.
ஆனால் ராகுலின் இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பினர். அதில் தகுந்த விளக்கம் தருமாறு கூறினர். இதை அடுத்து மீண்டும் ராகுல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது, ராகுல் கூறியது போல் நாங்கள் எந்த இடத்தில் சொன்னோம்? ராகுல் வருத்தம் தெரிவிப்பதாக அடைக்குறிப்புக்குள் கூறியுள்ளார். எல்லோரும் தவறு செய்வார்கள், ஆனால் அதனை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஏன் அவர் நேரடியாக பகிரங்க மன்னிப்பு கோரவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதை அடுத்து, ராகுல் தரப்பில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோருவதாகத் தெரிவிக்கப் பட்டது. நீதிபதிகள் சொல்லாததை தவறுதலாக சொல்லி விட்டோம் என்று அவர் ஒப்புக் கொண்டார்.
இருப்பினும் இந்த பதிலிலும் திருப்தி அடையாத நீதிபதிகள், வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்!