தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் அவருடைய வாகனத்தில் ஏறி, அவர் கன்னத்தில் ஓங்கி அடித்த சம்பவம் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது!
தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதை அடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என தில்லியில் மும்முனைப் போட்டி உள்ளது.
இந்நிலையில் தில்லியில் திறந்த வாகனத்தில் மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் செய்துகொண்டிருந்த போது, அரவிந்த் கேஜ்ரிவாலை கூட்டத்தில் இருந்து ஓடிவந்த ஒருவர் அவரது கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து அந்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கேஜ்ரிவாலை கன்னத்தில் தன் கையால் அடித்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். முன்னர் மை வீச்சு, பேனா வீச்சு, செருப்பு வீச்சு, ஷூ வீச்சு, விளக்குமாறால் அடித்தல் என பல்வேறு உத்திகளைக் கையாண்டு கொண்டிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது வெறும் கைகளால் அடி வாங்கும் உத்தியையும் கையாண்டிருக்கிறார் என்று பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.