கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நேற்று பிரசாரத்தில் பேசினார் அரசியல்வாதியாக அரிதாரம் பூசியுள்ள நடிகர் கமல்ஹாசன்! அப்போது அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என்று இஸ்லாமியர்கள் மத்தியில் கூறி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவரது பேச்சுக்கு நடிகர் விவேக் ஆனந்த் ஓபராய் கண்டித்து கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அரவக்குறிச்சி உட்பட நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் அனைத்துக் க்ட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதாரித்து மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பள்ளப்பட்டி அண்ணா நகரில் முஸ்லிம்கள் மத்தியில் பேசிய கமால்ஹசன், ‘’ இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியின் சிலைக்கு முன் நின்று கொண்டு இதைச் சொன்னேன்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்னை.
இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக்கொடியில் உள்ள மூவர்ணங்களும் இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நல்ல இந்தியனின் ஆசை. நான் ஒரு நல்ல இந்தியன், மார்தட்டிச் சொல்வேன்” என்று கூறினார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டர் பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் விவேக் ஆனந்த் ஓபராய்.
அவரது டிவிட்டர் பதிவில்…
டியர் கமல் சார்… நீங்கள் ஒரு மிகச் சிறந்த கலைஞன். கலைக்கு மதம் இல்லை என்பது போல் தீவிரவாதத்திற்கு மதம் இல்லை! நீங்கள் கோட்சேயை ஒரு தீவிரவாதி என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் அங்கே ‘ஹிந்து’ என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள்?! ஏனென்றால் நீங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நின்றுகொண்டு ஓட்டுக்காக அவ்வாறு கூறி இருக்கிறீர்கள்!
தயவுசெய்து மிகச்சிறிய கலைஞர் இருந்து மிகப்பெரிய கலைஞர் வரை நீங்கள் நாட்டை பிளவு படுத்தாதீர்கள் நாம் அனைவரும் ஒன்றே! ஜெய்ஹிந்த் – என்று நடிகர் விவேக் ஆனந்த் ஓபராய் தனது ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்டுள்ளார்!



