நாடு முழுவதும் 17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கட்ட பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதை அடுத்து, இனி கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நாளை மறு நாள் மீதம் உள்ளது. இதன் பின்னர் வரும் மே 23ம் தேதி அடுத்த மக்களவை யார் பக்கம் என்பது தெரிந்து விடும்!
மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. இதன் 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கடைசிக் கட்டமான 7ம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்த 7ம் கட்டத் தேர்தலில் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதை முன்னிட்டு, கடைசி நாளான இன்று, பாஜக., தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, கடைசிக் கட்ட பிரசாரத்தை முடித்தனர். இந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, பொய்களும் பித்தலாட்டங்களும் கூடுதல் இடம் பிடித்தன. வழக்கத்தை விட மோசமான பொய்கள், குற்றச்சாட்டுகள், தனிநபர் தாக்குதல்கள் என பலவற்றையும் காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அள்ளி வீசி, ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தன.
இது போல், தமிழகத்திலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு வரும் மே 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தது. இந்நிலையில், 4 தொகுதி இடைத் தேர்தலையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக, கமல்ஹாசனின் கருத்தால் எழுந்த சர்ச்சைகளை அடுத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக இன்று காலை தலைமை செயலர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.