தில்லி: மீண்டும் மெஜாரிடியுடன் பாஜக.,கூட்டணி ஆட்சி அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய ‘எக்ஸிட் போல்’, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்டத் தேர்தலில், கடைசிக் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இதை அடுத்து, எக்ஸிட் போல் – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன.
இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், எக்ஸிட் போல் – கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் டிவி., விஎம்ஆர் இணைந்து நடத்திய எக்ஸிட் போல்- முடிவில், பாஜக.,கூட்டணி 306 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ., 132 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு கூட்டணி அல்லாத பிற கட்சிகள், 104 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. இதனால் பாஜக.,வினர் உற்சாகத்தில் உள்ளனர்.