தில்லியில் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி திடீர் பல்டி அடித்துள்ளது. தில்லியில் இன்று ராகுல், சோனியாவை மாயாவதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டது பகுஜன் சமாஜ் கட்சி!
தேர்தலுக் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் பகுஜன் சமாஜ் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து தில்லி சந்திப்பு எதுவும் இல்லை என்று ரத்து செய்துவிட்டு, லக்னோவில் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார் மாயாவதி.
பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து உ.பி.யில் தேர்தலை சந்தித்தது இந்த முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரம வைரிகளாகக் கருதும் இருகட்சிகளும் ஒரே மேடையில் நின்றதும், அகிலேஷின் தந்தை முலாயம் திக்கித் திணறி, வேண்டாவெறுப்பாக கைகோத்ததும் அரசியல் வானில் அதிசயமாகப் பார்க்கப் பட்டது.
மகா கட்பந்தன் என்று பெரும் கூட்டணிக்கு திட்டமிட்டு தேர்தலை சந்தித்தன இரு கட்சிகளும். காங்கிரஸின் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுத்து, காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்க்காமல் கழற்றி விட்டன. எப்படியும் 30 க்கும் மேற்பட்ட இடங்களை இரு கட்சிகளும் தனித்தனியாகப் பிடிக்கும் பட்சத்தில், பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் மாயாவதி இருந்ததும், அது தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் தகர்ந்து போனதும் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவரும் சந்தித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, 1977ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்றத்தை போல, வாரணாசியில் பிரதமர் மோடி தோற்க வேண்டும் என மாயாவதி கடும் சாபத்தைக் கொடுத்தார். அவர் தனது டுவிட்டர் பதிவில், குஜராத்தின் வளர்ச்சியைப் போல, உ.பி.,யின் கிழக்கு பகுதியில் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் நீக்கப்படவில்லை. அங்கு எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றாமல், மக்களை, யோகி ஆதித்யநாத்தும், நரேந்திர மோடியும் ஏமாற்றிவிட்டனர்.
கோரக்பூர் தொகுதியில் யோகியை மக்கள் நிராகரித்தனர். மோடியின் வெற்றியைவிட, அவரது தோல்வி வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திரா தோற்கடிக்கப்பட்டார். அதுபோல் இப்போது வாரணாசி தொகுதியில் மீண்டும் நிகழுமா?
மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து, வகுப்புவாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய மாநில அரசுகள் தூண்டி
விடுகின்றன.. என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மாயாவதி, தில்லியில் சோனியா மற்றும் ராகுலை சந்திக்க உள்ளதாகக் கூறப் பட்டது. ஆனால் தற்போது அந்த முடிவை மாயாவதி கைவிட்டுவிட்டார்.