காங்கிரஸ் தலைவர் ராகுல் தோல்வி அடைந்த அமேதி தொகுதியில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக.,வைச் சேர்ந்த ஸ்மிருதி இரானியின் நெருங்கிய உதவியாளர் நேற்று இரவு சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உபி மாநிலம் அமேதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக., சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுலை வீழ்த்தி கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
ஸ்மிருதி இரானி ராகுலைத் தோல்வி அடையச் செய்ததால் அவருக்கு தற்போது கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஸ்மிருதி இரானிக்கு உதவியாளராக இருந்து சிறப்பாக பணியாற்றிய சுரேந்திர சிங், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
சுரேந்திர சிங், ஜாமோ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பரௌலியா கிராமத்தின் கிராமத் தலைவராக இருந்தவர். அண்மையில் பரௌலியா கிராமம், ஒரு செய்தியின் மூலம் தேசிய அளவில் கவனத்தைக் கவர்ந்தது. சுரேந்திர சிங், ஏராளமான காலணிகளை தனது கிராமம் மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள மக்களுக்கு வழங்கியுள்ளார். ஆனால், இதனைக் குறிப்பிட்ட பிரியங்கா, ராகுலை அவமதிப்பதற்காகவே ஸ்மிருதி இரானி இவ்வாறு காலணிகளை கிராம மக்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டார். இது தேசிய அளவில் பெரிய செய்தியானது.
இந்நிலையில், மர்மநபர்களால் சுடப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இருந்தவரை உடனடியாக லக்னௌ மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் இது தொடர்பாக இருவரைப் பிடித்து அவர்களிடம் விசாரித்து வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.