தனது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மைக் பிடித்துப் பாடிய எஸ்.ஐ., விஷ்ணுபிரசாத் திடீரென சரிந்து விழுந்து மரணித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத்(55) திருவனந்தபுரம் அருகே உள்ள கரமணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவரது 3 வாரிசுகளில் இருவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இளைய மகளான ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்.
கொல்லத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரைத் தேர்ந்தெடுத்தார். திருமண ஏற்பாடுகள் விமர்சையாக நடந்தன. திருமணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தமும் கோலாகலமாக நடந்தது.
தனது கடைசி மகள் திருமணம் என்பதால் விஷ்ணு பிரசாத் எதைப் பற்றியும் கவலைப் படாமல் நன்கு செலவழித்தார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இசைக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்தார். இசைக் கச்சேரியில் பாடகர்கள் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு பிரசாத்தும் நன்கு பாடக் கூடியவர் என்பதால், அவர் ஒரு பாடல் பாடி, தாங்கள் கேட்க வேண்டும் என்று விஷ்ணு பிரசாத்தின் நண்பர்கள் சிலர் வற்புறுத்தினர். நண்பர்களுக்காக அவரும் அதை ஏற்றுக் கொண்டு, மேடையில் மைக்கைப் பிடித்து ஒரு பாடலை உற்சாகமாகப் பாடத் தொடங்கினார்.
பாடல் நிறைவு பெறும் முன் சிறிது நேரத்திலேயே அவர் மேடையில் மயங்கிச் சரிந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகே ஒடினர்.
தந்தை திடீரென மயங்கிச் சரிந்தது கண்டு, மகள் ஆர்ச்சா கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறிய உறவினர்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை தொடரும்படி கூறிவிட்டு, உடனடியாக விஷ்ணு பிரசாத்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.
மறுநாள் திருமணம் நடக்க விருந்த நிலையில் விஷ்ணுபிரசாத் இறந்த தகவலை அவரது மகளிடம் தெரிவித்தால் அவரால் அந்த துக்கத்தை தாங்க முடியாது என்று உறவினர்கள் கருதினர். மேலும், விஷ்ணுபிரசாத் ஆசை ஆசையாக தனது மகளுக்கு நடத்த திட்டமிட்ட திருமணம் தடைபடும் என்று கருதிய உறவினர்கள், விஷ்ணு பிரசாத் இறந்த தகவலை யாரிடமும் தெரிவிக்காமல் மறைக்க கனத்த இதயத்துடன் முடிவு செய்தனர்.
ஆர்ச்சாவிடம் தந்தை சிகிச்சையில் இருப்பதாகவும், திருமணத்துக்கு அழைத்து வந்துவிடலாம் என்றும் என்றும் கூறி சமாதானப் படுத்தினர்.
தொடர்ந்து நேற்று திட்டமிட்டபடி ஆர்ச்சாவுக்கு திருமணமும் நடைபெற்றது. ஆயினும் தனது கழுத்தில் மாங்கல்யம் ஏறும் வரை தந்தை திருமண மண்டபத்துக்கு வரவில்லையே எனு கலங்கிய கண்களுடன் தந்தையைத் தேடிக் கொண்டிருந்தார் ஆர்ச்சா. மணமகனும், உறவினர்களும் அவரது தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி திருமணத்தை நடத்தி முடித்தனர்.
திருமணச் சடங்கெல்லாம் நிறைவடைந்த பின்னரே, ஆர்ச்சாவிடம் அவரது தந்தை மறைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு திருமணம் நடந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கும் முன்பே, தனக்கு ஒரு கணவரைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த தந்தை, தனது திருமணத்தைப் பார்க்காமலேயே மரணம் அடைந்துவிட்டாரே என்று ஏங்கி அழுதார் ஆர்ச்சா. அவரின் கதறல் அங்கே கூடியிருந்த அனைவரையும் கண்ணீரில் நனைத்தது.





