தமிழக அரசு கோரியபடி, காவிரியில், 9.2 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதனை ஏற்று காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடியுள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் விவாதப் பொருள் நிரலில் மேகதாது விவகாரம் சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேகதாது அணைத் திட்டம் குறித்து வழக்கு உள்ளதால், அது குறித்து இனிவரும் கூட்டங்களில் விவாதிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
குறுவை சாகுபடிக்கு ஏதுவாக ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மே மாதம் முடிவதற்குள் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதனிடையே, அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றது கர்நாடகம்! ஆனால், கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஜூன் மாதத்திற்குரிய 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதனை கர்நாடகம் ஒப்புக் கொண்டதாக, கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்தார்.