புதிதாக, பயங்கரவாதக் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அமைச்சர் அமித் ஷாவின் அதிரடி நடவடிக்கையாக இந்தக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குடன் நேரில் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காஷ்மீர் மாநில சீரமைப்புக்கு சில திட்டங்களை வகுத்தார்.
பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி அளிப்பவர்களை ஒடுக்கும் வகையில், மத்திய அரசின் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை உறுப்பினர்களாக்கி புதிய பயங்கரவாதக் கண்காணிப்புக் குழுவை அமைக்க ஏற்பாடு செய்தார். இது தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் அமைக்கப் பட்டுள்ளது.
இந்தப் புதிய பயங்கரவாத கண்காணிப்புக் குழுவுக்கு ஜம்மு காஷ்மீர் சிஐடி பிரிவு டிஜிபி தலைமை வகிப்பார். புலனாய்வுத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மத்திய புலனாய்வு வாரியம், மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம், மத்திய நேரடி வரிகள் வாரியம், அமலாக்கத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக செயல்படுவர்.
இதன் மூலம், வர்த்தக பொருளாதார ரீதியாகவும் பயங்கரவாதக் குழுக்களுக்கு சேரும் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து தெரியவரும்.


