நெய்யாற்றின்கரை அருகே அம்பூரியைச் சேர்ந்தவர் அகிலேஷ் வயது 27 ராணுவ வீரர். பூவாறு பகுதியைச் சேர்ந்தவர் ராகிமோள். இருவரும் காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அகிலேஷுக்கு வேறு இடத்தில் அவரது பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்ய முடிவெடுத்து நிச்சியமும் செய்திருக்கிறார்கள். இதையறிந்த ராகிமோள், அகிலேஷுக்கு நிச்சயித்திருந்த பெண்ணை நேரில் சந்தித்து தனக்கும் அகிலேஷுக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அகிலேஷ், தனது சகோதரர் ராகுல், நண்பர் ஆதர்ஷ் ஆகியோரின் உதவியுடன் ராகி மோளை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராகிமோள் மாயமானது குறித்து நெய்யாற்றின்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராகிமோளை அகிலேஷ் உள்ளிட்ட மூவர் கொலை செய்து, சடலத்தை வீட்டினருகில் புதைத்தது தெரியவந்தது.
ராகிமோளின் செல்போன் சிக்னலின் வைத்து அவரைத் தேடும் பணி நடந்த போது, அகிலேஷ் வீட்டுக்கு அருகே செல்போன் சிக்னல் கிடைத்ததால் குற்றவாளி சிக்கினார்.
வீட்டினருகே புதைக்கப்பட்ட ராகிமோளின் உடலும் கடந்த 25ம் தேதி தோண்டி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ராகி மோள் கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் கார் என்பதும், அவரும் அகிலேஷும் நண்பர்கள் என்பதும், அகிலேஷ் விடுமுறைக்கு வந்தபோது திற்பரப்பிலுள்ள நண்பரின் காரை எடுத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, நெய்யாற்றின்கரை டி.எஸ்.பி. அனில் குமார் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சனிக்கிழமை திற்பரப்பு வந்து கொலைக்கு அகிலேஷு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து சென்றனர்.