ஆட்சி, கட்சி இரு தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும்: சசிகலா முதல்வராக தம்பிதுரை வேண்டுகோள்

Published:

சென்னை:

ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒருவரிடம் தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை, சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளரும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சசிகலா ஆற்றிய உரை அனைவரது உள்ளத்தையும் உருகச் செய்வதாக அமைந்திருக்கிறது. மிகுந்த கண்ணியத்தோடும், கடமை உணர்ச்சியோடும் தனது உரையில் சசிகலா எடுத்துரைத்த கருத்துகள், அ.தி.மு.க.வை சரியான, தகுதியான ஒரு பெருந்தகையின் கையில் ஒப்படைத்து இருக்கிறோம் என்ற மன நிம்மதியை அனைவருக்கும் அளித்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவும், தமிழ் மொழியின் தொன்மையும், சிறப்பும் போற்றப்படவும் எல்லோருக்கும் பயன்தரும் ஒரு ஜனநாயக ஆட்சி முறை உருவாகவும் தந்தை பெரியாரை மையமாக வைத்து, பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்க அரசியல் பயணம் அவர் அமைத்துத் தந்த பாதையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அடிச்சுவட்டில் இன்னும் பல தலைமுறைகளுக்கு பயணிக்கும் என்ற நம்பிக்கையை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துவதாக சசிகலாவின் முதல் பேச்சு அமைந்திருந்தது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

27 ஆண்டுகள் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக மகத்தான பணிகளை ஆற்றிய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, Ôஅ.தி.மு.க.வும், இதன் கோடானுகோடி தொண்டர்களும் என்ன ஆவார்களோ!Õ என்று கலங்கியிருந்த வேளையில், கலங்கரை விளக்கமாய் சசிகலா திகழ்கிறார். அதுபோலவே, மிகுந்த நம்பிக்கையோடு தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு மகத்தான வெற்றியால் விளைந்திட்ட தமிழக அரசு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைத்த மக்கள் நலம்பேணும் அரசாகத் தொடருவதற்கு ஏற்ற தலைமை சசிகலாவின் தலைமையே என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஆட்சித் தலைமை ஒருவரிடமும், கட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருப்பது, இந்தியாவில், மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும்; ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஒன்றாக, ஒரே இடத்தில், ஒருவரிடமே இருக்கும்போது அந்த அரசு ஒருமித்த சிந்தனையோடும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களோடும் இயங்குவதை பார்த்திருக்கிறோம்.

ஆட்சியும், கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களுக்கும், செயல்திறன் இல்லாத நிலைக்கும் சில அரசுகள் தள்ளப்பட்டு, காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்திருப்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது. சசிகலாவோடு அரசியல் ரீதியாகவும், அ.தி.மு.க. தேர்தல் பணிகள், கட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டும் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்பில் இருந்த என்னைப் போன்ற பலநூறு பேர்களுக்கு அவருடைய மதிநுட்பமும், அரசியல் சாதுர்யமும் எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா போலவே சிந்தித்து, தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் தராமல் முடிவெடுக்கும் ஆற்றலும் நன்கு தெரியும்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இதற்கு எடுத்துக்காட்டாக சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு ஆற்றிய உரையில் ‘ஜெயலலிதா, நமக்கு கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை, அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றுவோம். ஜெயலலிதா நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில் தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில் தான் நமது பயணம்’ என்றும், ‘அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக, என்னை ஒருமனதாக தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், ஜெயலலிதா வழியில் பின்பற்றுவோம்’ என்றும் கூறியிருக்கிறார்.

கட்சித் தலைமையையும், ஆட்சி அதிகாரமும் ஒரே இடத்தில் இருந்தால் தான் ஜெயலலிதா விட்டுச்சென்ற கட்சிப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் அவர் எதிர்பார்த்தபடி செய்ய இயலும் என்பது எல்லோருடைய திடமான எண்ணமாகும். இன்னும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க நாடு இருக்கும் சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு மென்மேலும் சிறப்புடன் செயல்பட்டு மக்களின் பேராதரவை, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பெற்றிருந்ததைப்போல தொடர்ந்து பெற்றிடவும் சசிகலா உடனடியாக தமிழ்நாடு முதல்-அமைச்சராக ஆட்சித் தலைமையை ஏற்க வேண்டும் என்று அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

திறமை, உழைப்பு, மக்கள் மீது அன்பு, கட்சித் தொண்டர்கள் மீது அக்கறை என்பவற்றில் ஜெயலலிதாவை போலவே சிறந்தவராகத் திகழும் சசிகலா கட்சியை கட்டிக்காத்து, வழிநடத்தும் பெரும் பணிகளுக்கிடையே தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும் பொறுப்பேற்று கட்சிக்கும், தமிழ்நாட்டிற்கும் மிக, மிக இன்றியமையாதது என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.
என்னைப் போன்ற கட்சித் தொண்டர்களின் மனநிலைய ஏற்று, விரைவில் சசிகலா தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img