சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மீது சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார் தஹில் ரமானி! இவர், அண்மையில் மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் இடமாற்ற உத்தரவை ஏற்க மறுத்த தஹில் ரமானி, தனது இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்யக்கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை, நிராகரிக்கப்பட்டது.
இதனால் தாம் மேகாலயா சென்று பணியாற்ற முடியாது என்று கூறி, தன் பதவியை தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.
இதனிடையே தஹில் ரமானி சென்னை புறநகர் பகுதியில் முறைகேடான வகையில் ரூ. 3.18 கோடி அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு வீடுகள் வாங்கி இருப்பதாக மத்திய உளவு அமைப்பான ஐ.பி., குற்றம் சாட்டியது.
மேலும் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றத்தை தஹில் ரமானி கலைத்து உத்தரவிட்டதில் உள்நோக்கம் உள்ளது என்றும், அவரை தமிழக அமைச்சர் ஒருவர் அடிக்கடி சந்தித்தது குறித்தும் குறிப்பிட்டு, இதன் அடிப்படையில் தான் தவறு நடந்துள்ளது’ என ஐந்து பக்க அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புலனாய்வு அமைப்பு அனுப்பியது.
இந்நிலையில், தஹில் ரமானி மீதான குற்றச்சாட்டைசி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.
இதை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் தஹில் ரமானியிடம் விசாரணையை துவக்கி அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குற்றம் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் தஹில் ரமானி கைது செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.